அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்த தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
ஏற்படும்.
மேலும், பொங்கல் பரிசாக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயும், முன்னாள் கிராம நிருவாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.