வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்காது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்கும் என வெளியான தகவல் உண்மையில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பினை கடந்த 30ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. இதனிடையே, வடக்கிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என தகவல் ஒன்று வெளியாகி பரவி வந்தது. இது தவறான தகவல் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொகபத்ரா விளக்கமளித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது போன்ற ஒரு தகவலை வெளியிடவில்லை என்றும் தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென்மேற்கு பருவமழை வெளியேறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு பிறகு வானிலை நிகழ்வை பொறுத்து தென்மேற்கு பருவமழை வெளியேறும். அதன் பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும். எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதனை தற்போது சொல்ல முடியாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொகபத்ரா விளக்கமளித்துள்ளார்.

-இரா.நம்பிராஜன்
Previous Post Next Post

نموذج الاتصال